பயப்படாம, ஆளுக்கொரு லெக் பீஸ் சாப்பிடுங்க... கரூரைக் கலக்கிய சிக்கன் மேளா!
கரூர்: பறவைக் காய்ச்சல் பீதியால் கோழிக் கறியை விட்டு ஆட்டுக் கறிக்கும், மீனுக்கும் மாறி வரும் நிலையில் பறவைக் காய்ச்சல் பீதி இல்லாமல் தைரியமாக கோழிக்கறியைச் சாப்பிடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது கரூர் கறிக்கோழி பண்ணையாளர்கள் ஒருங்கிணைப்புக் கமிட்டி. இதற்காக கரூரில் சிக்கன் மேளா ஒன்றையும் இவர்கள் நடத்தினர்.
அண்மையில் கேரள மாநிலம், ஆலப்புழையில், வாத்துக்களை தாக்கிய பறவை காய்ச்சலை அடுத்து தமிழகத்தில் கறி கோழி, முட்டை, முட்டை கோழிகளை பொதுமக்களை நுகரும் அளவு குறைந்து விட்டது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள கோழி பண்ணையாளர்களிடம் கறிகோழிகள் தேக்கமடைந்தது.
இதையடுத்து கறிக் கோழிகளால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாக கரூர் பசுபதிபாளையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சிக்கன் மேளா என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் தனியார் மருத்துவமனை மருத்துவர் வேலுசாமி, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழனியப்பன், கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, லாலிபாப் போன்ற உணவுகள் தயார் செய்யப்பட்டு சிக்கன் மீதுள்ள அச்சத்தை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இது குறித்து கறிகோழி பண்ணையாளர்களின் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர் லட்சுமணன் கூறும் போது., தமிழகத்தில் பறவை காய்ச்சல் தாக்கம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும் சிக்கனை சாப்பிடுவதில் அச்சம் தேவையில்லை என்பதை பொதுமக்களுக்கு விளக்கவே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.