கனமழையால் மீன் வரத்து குறைவு... கோழி பின்னால் ஓடிய மக்கள்... விலை விர்ர்ர்....!
புதுவை: புதுவையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி நேற்று கோழிக்கறி விலை அதிரடியாக அதிகரித்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால், கடந்த சில நாட்களாக புதுவையில் மீன் வரத்துக் குறைந்தது. இதனால் அசைவப் பிரியர்களின் கவனம் கோழிக்கறி மீது திரும்பியது.
இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கோழிக்கறிக்கடை உரிமையாளர்கள் நேற்று கோழிக்கறி விலையை அதிரடியாக உயர்த்தினர்.
கோழிக்கறிக் குழம்பு...
பண்டிகை மற்றும் விடுமுறை தினம் என்பதால் பல குடும்பங்களில் தீபாவளி அன்று அசைவ உணவு தயாரிப்பது வழக்கம். விலை குறைவு என்பதாலும், சுவை காரணமாகவும் கோழிக்கறிக்குத் தான் பலர் முதலிடம் அளிப்பர். அந்தவகையில், நேற்று இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
மீன் பிரியர்கள் ஏமாற்றம்...
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை என்பதால் மார்க்கெட்டுகளில் மீன் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அலைமோதிய கூட்டம்...
எனவே, அவர்களின் அடுத்தத் தேர்வு கோழிக்கறியாகவே இருந்தது. இதனால் கோழிக்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது.
விலை உயர்வு...
இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வியாபாரிகள், கோழிக்கறி விலையை அதிரடியாக கிலோவிற்கு ரூ.50 வீதம் உயர்த்தி விற்பனை செய்தனர். கடந்த வாரம் 100 முதல் 110 ரூபாய் வரை விற்ற ஒரு கிலோ கோழிகறி, புதுவையில் நேற்று 150 முதல் 160 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.