"40 வயது இளைஞர்" தமிழக காங்கிரஸ் தலைவராகும் காலம் வர வேண்டும்: ப. சிதம்பரம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு 40 வயது இளைஞர் தலைவராகும் காலம் வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் 3-ஆவது இடத்தில் உள்ளது. அதிமுக, திமுக இரண்டும் மிகப்பெரிய மாநிலக் கட்சிகள். தேசிய நலன் பற்றி கவலைப்படாத மாநிலக் கட்சிகள் வலுவாக இருக்கும் தமிழகத்தில் தேசியக் கட்சியை நடத்துவது கத்தி மீது நடப்பது போன்றது.
தேசியக் கட்சி என்பது சில நேரங்களில் பலம். பல நேரங்களில் பலவீனம். ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர வேண்டுமானால் பேச்சு, எழுத்து, பிரசாரம், போராட்டம் என்ற நான்கு ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆயுதங்கள் இல்லாமல் நாம் நிராயுதபாணியாக இருந்தோம். இனி இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய தலைவர் இளங்கோவன் சிந்திக்க வேண்டும். பேச வேண்டும். எழுத வேண்டும். எழுத வாய்ப்பு கிடைக்காவிட்டால் நமக்கென்று ஒரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும்.
இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் குறைந்தது 117 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற வேண்டுமானால் 117 தொகுதிகளில் காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும். கிராம அளவில் காங்கிரஸ் கமிட்டிகள் இருக்க வேண்டும்.
கட்சி அமைப்புகள் இல்லாமல் ஆட்சியைப் பிடிப்போம் என்று கனவு காண்பது சரியானது அல்ல. நேரு 29 வயதில் அலகாபாத் நகர மேயரானார். 40- ஆவது வயதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார்.
29 வயதில் நேருவால் மேயர் ஆக முடியும் என்றால் அந்த வயதுள்ள இளைஞர்களால் இப்போது கட்சிப் பொறுப்பை ஏற்க முடியாதா? மாவட்ட, வட்டார, கிராம காங்கிரஸ் கமிட்டிகளுக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுப்பாளர்களாக நியமிப்பது குறித்து புதிய தலைவர் சிந்திக்க வேண்டும்.
40 வயது இளைஞர் ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்கும் காலம் வர வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியும்.
இவ்வாறு சிதம்பரம் பேசினார்..