ராஜ்யசபா எம்.பி. 'சீட்'. கண்டு கொள்ளாத காங். மேலிடம்.. அதிருப்தியில் ப. சிதம்பரம்!!
சென்னை: தமக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியைப் பெற்றுத் தருவதில் காங்கிரஸ் மேலிடம் ஆர்வம காட்டாததால் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்தார். சிவகங்கை தொகுதியில் மகன் கார்த்தி சிதம்பரத்தை இறக்கினார் அவர். ஆனால் கார்த்தி சிதம்பரம் தேர்தலில் வெற்றி பெறவில்லை.
லோக்சபா தேர்தலில் சிதம்பரம் போட்டியிடாததால் காங்கிரஸ் மேலிடம் அதிருப்தியில் இருந்தது. இதனால் டெல்லிக்குப் போனாலும் தமது வழக்கறிஞர் பணியை மட்டுமே பெரும்பாலும் பார்ப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டார் சிதம்பரம்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு பார்த்தார். ஆனால் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பிய சிதம்பரத்தின் கனவு நிறைவேறவில்லை.
இதனிடையே கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அப்போதும் கூட தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சிதம்பரம் எதிர்பார்த்தார். ஆனால் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத்தையும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சிதம்பரம் விமர்சித்து வருவதால் சிதம்பரத்துக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
காங்கிரஸைச் சேர்ந்த பி.எல்.புனியா மற்றும் மனோரமா சர்மா ஆகியோரை காங்கிரஸ் ராஜ்யசபா சபா எம்.பி.களாக்கியது. அத்துடன் தமிழக காங்கிரஸ் கமிட்டியிலும் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு முக்கிய பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சிதம்பரம். அதுவும் நடக்கவில்லை.
இதனால் காங்கிரஸ் மேலிடம் மீது சிதம்பரம் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.