சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேக விழாவை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். ஆடலரசனாக இங்கு சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு 1987ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்கு மீண்டும் சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ரூ. 1 கோடி செலவில் கோவில் திருப்பணிகள் நடைபெற்றது.
நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை, ஆயிரங்கால் மண்டபம், கோவிலின் 4 ராஜ கோபுரங்கள், பரிவார தெய்வங்கள் மற்றும் கொடிமரம் புதுப்பிக்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்து கடந்த 22ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 25ஆம் தேதி முதல் தொடர்ந்து 12 யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
கோலகல கும்பாபிஷேகம்
இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 7.30 மணிக்கு நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை மற்றும் ஆயிரங்கால் மண்டபம், 4 ராஜ கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
லட்சக்கணக்கான பக்தர்கள்
கும்பாபிஷேகத்தில் காஞ்சி ஜெயேந்திரந்திர சரஸ்வதி சுவாமிகள், தருமபுர ஆதீனம் சண்முக பரமாச்சாரிய தேசிகர், மவுனமட சுவாமிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள்,எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், செல்வி ராமஜெயம் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிதம்பரம் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. பக்தர்களுக்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நாளை சித்திரை தேரோட்டமும், ஞாயிறன்று மகாதரிசனமும் நடைபெற உள்ளது.