சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிதம்பரம்: சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்சசபைகளில் பொற்சபையாகவும் போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 25ம்தேதியும், 26ம்தேதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீமந் ஆனந்த நடராஜமூர்த்திக்கு மகாஅபிஷேகமும், ஆருத்ரா மகா தரிசனமும் நடைபெற உள்ளது.
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி மாதம் திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாக்களில் தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து நடராஜரை தரிசனம் செய்வார்கள்.
சிறப்பு வாய்ந்த மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்கு திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை, பஞ்சாங்கம் படித்தல், காலசந்தி பூஜை, ரகசிய பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சோமஸ்கந்தர் சிவானந்த நாயகி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காலை 9.30 மணியளவில் நடராஜர் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
பின்னர் தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனை தொடர்ந்து காலை 9.50 மணியளவில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் உற்சவ ஆச்சாரியார் சண்முகசுந்தர தீட்சிதர் தலைமையில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிவ, சிவா என்று முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து நடராஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் ஊர்வலமாக சென்று, கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தை வந்தடைந்தனர்.
பின்னர் இரவு 8 மணிக்கு கொடிமரம் முன்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தங்கம், வெள்ளி வாகனங்களில் 4 வீதிகளிலும் உலா வந்தனர். ஞாயிறன்று வெள்ளிபூத வாகனத்தில் வீதிஉலாவும், 21ம்தேதி வெள்ளிரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் நிகழ்ச்சியும், 22ம்தேதி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா, 23ம்தேதி தங்ககைலாச வாகனத்தில் வீதிஉலா, 24ம்தேதி தங்க ரதத்தில் பிஷாடனர் வெட்டுக்குதிரையில் வீதிஉலாவும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25ம்தேதியும், 26ம்தேதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீமந் ஆனந்த நடராஜமூர்த்திக்கு மகாஅபிஷேகமும், மதியம் 2 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஆருத்ரா மகா தரிசனமும் நடைபெற உள்ளது.