நாட்ல எந்த "பி.சி." க்கும் பாதுகாப்பு இல்லை...அப்பப்பா!
ப.சிதம்பரம் வீட்டில் நடந்த சிபிஐ ரெய்டு, வான்னாகிரை வைரஸ் தாக்குதலால் கணினிகள் பாதிக்கப்படுவதையும் இணைந்து நாட்டில் எந்த பி.சி.க்கும் பாதுகாப்பு இல்லை என்பதே இன்றைய ஹாட் டாபிக்.
சென்னை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நடந்த சிபிஐ ரெய்டு, வான்னாக்ரை வைரஸ் தாக்குதல் ஆகியவற்றை கோர்த்துவிட்டு நாட்டில் எந்த பி.சி.க்கும் பாதுகாப்பு இல்லை என்று சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் வான்னாக்ரை என்ற புதிய வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களை ஒரு கை பார்த்து வருகின்றன. இவற்றை ஹேக்கர்கள் பணம் பறிக்கும் நோக்கில் ஏவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வைரஸ்கள் மின்னஞ்சல் அல்லது கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் தாக்கப்படுகின்றன. இவை முதலில் கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்கும். அதற்கான கீயை பணம் கொடுத்தால் ஹேக்கர்கள் தருவர். இந்த வைரஸால் உலகம் முழுவதும் 99 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கூட இந்த வான்னாக்ரை வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. 14-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.
இந்த இரு சம்பவங்களையும் வைத்து சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். அதாவது சிதம்பரத்தின் பெயரை ஆங்கிலத்தில் சுருக்கமாக பி.சி. என்றழைப்பர். அதேபோல பர்சனல் கம்ப்யூட்டர்கள் எனப்படும் கணினிகளையும் ஆங்கிலத்தில் பி.சி. என்றே அழைப்பர்.
இதை வைத்து நாட்டில் எந்த பி.சி.க்கும் பாதுகாப்பே இல்லை என்று நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர். என்னே! ஒரு நகைச்சுவை திறன் இந்த நெட்டிசன்களுக்கு!!