தீவிர அரசியலுக்கு முழுக்குப் போடுகிறார் ப.சிதம்பரம்- கிளப்பி விடும் ஜி.கே.வாசன் கோஷ்டி
சென்னை: தீவிர அரசியலுக்கு முழுக்குப் போட முடிவு செய்துவிட்டதாலேயே சோனியா- ராகுலை ப. சிதம்பரம் விமர்சிப்பதாக ஜி.கே.வாசன் கோஷ்டியினர் டெல்லிக்கு தகவல்களை பறக்க விட்டுவருகின்றனர்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அமைதியாக இருந்த ப. சிதம்பரம், திடீரென ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சோனியா, ராகுலை விமர்சித்த கையோடு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவராவார் என்றும் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதிய ஜி.கே. வாசன், ப. சிதம்பரத்துக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்தார். அதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனில் சாஸ்திரி, ரஷீத் ஆல்வி உள்ளிட்டோரும் சிதம்பரத்துக்கு எதிராக சாட்டையை சுழற்றியுள்ளனர்.
இத்துடன் விட்டுவிடாத ஜி.கே.வாசன் கோஷ்டியினர், அரசியலைவிட்டே ஒதுங்குவது என்று ப.சிதம்பரம் முடிவு செய்துவிட்டார்.. இதனாலேயே காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்து வருகிறார். அத்துடன் எழுத்து என்ற இலக்கிய இயக்கத்தை தொடங்கி முழுதாகவே ஒதுங்கத் தொடங்கிவிட்டார் என்று டெல்லிக்கு தகவல்களை அனுப்பி வருகின்றனர்.
இதனால் ப. சிதம்பரம் கோஷ்டியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.