கராத்தே தியாகராஜன், திருச்சி சுஜாதா உட்பட 8 பேருக்கு சீட் கேட்க போராடும் ப.சி.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெறாத போதும் தமது ஆதரவாளர்களான கராத்தே தியாகராஜன், திருச்சி மாஜி மேயர் சுஜாதா உள்ளிட்ட 8 பேருக்கு சீட் பெற்றுத் தருவதில் முனைப்பாக இருக்கிறாராம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு உட்பட 8 பேர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் மூத்த தலைவரான ப.சிதம்பரம் பெயரோ அவரது ஆதரவாளர்களோ இக்குழுவில் இடம் பெறவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள ப.சிதம்பரம் நேற்று தமது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதில் கார்த்தி சிதம்பரம், கே.எஸ். அழகிரி, வள்ளல்பெருமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீட்டு குழுவில் உள்ள தங்கபாலு, திருநாவுக்கரசர், கோபிநாத் ஆகியோரும் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர்.
அப்போது தமது ஆதரவாளர்கள் 8 பேருக்கு தொகுதிகளை ஒதுக்குமாறு பட்டியல் ஒன்றை சிதம்பரம் தங்கபாலுவிடம் கொடுத்திருக்கிறார்.
அதில் கராத்தே தியாகராஜனுக்கு மயிலாப்பூர்; புதுகை புஷபராஜூக்கு திருமயம்; திருச்சி மாஜி மேயர் சுஜாதாவுக்கு திருச்சி மேற்கு அல்லது ஸ்ரீரங்கம், கேஎஸ் அழகிரிக்கு சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் வள்ளல்பெருமான், எம்.என். கந்தசாமிக்கு தொண்டாமுத்தூர் என 8 தொகுதிகள் கேட்கப்பட்டிருந்ததாம். இந்த பட்டியலை டெல்லி மேலிடத்தில் தங்கபாலு கொடுக்க இருக்கிறாராம்.