கார்த்தி மீது அடிப்படை ஆதாரமில்லாத வழக்கு.. நிச்சயம் வெல்வோம்: நம்பிக்கையில் ப. சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் மீது அடிப்படை ஆதாரமே இல்லாத வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது ப.சிதம்பரத்தின் கருத்தாக கூறப்படுகிறது.
சென்னை: கார்த்தியின் மீதான சி.பி.ஐ பிடி இறுகியதை நினைத்து மிகுந்த வேதனையில் இருக்கிறார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். ' ஒரு தந்தையாக மிகவும் வேதனையில் இருக்கிறேன். எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத வழக்கில் கார்த்தியைக் கைது செய்திருக்கிறார்கள். சட்டரீதியாகவே அவர்களைத் தண்டிப்பேன்' எனக் குமுறியிருக்கிறார் சிதம்பரம்.
கார்த்தி சிதம்பரம்-ஸ்ரீநிதி தம்பதியினருக்கு ஒரே மகள். தற்போது பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கிறார். தேர்வு முடிவுகள் வெளிவருவதற்குள் லண்டனில் மகளுக்கு சீட் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்துக்குப் பயணப்பட்டார் கார்த்தி. அதேநேரம், சிதம்பரமும் லண்டனில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காகக் கிளம்பிக் கொண்டிருந்தார்.
வேதனையில் சிதம்பரம்
'மூன்று நாள் பயணம்தான். வந்தபிறகு டெல்லியில் நடக்கும் வழக்கைப் பற்றிப் பேசுவோம். ஆடிட்டர் கைதை முன்வைத்து சி.பி.ஐ எதாவது செய்ய முயலும்' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் சிதம்பரம். அவர் நினைத்ததுபோலவே, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் கார்த்தி. இந்தக் கைது நடவடிக்கையால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் சிதம்பரம்.
கபில் சிபல், அபிஷேக் சிங்வியுடன் ஆலோசனை
லண்டன் பயணத்தையும் கேன்சல் செய்துவிட்டு திரும்பியிருக்கிறார். அன்று இரவே, அடுத்துச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோருடன் தீவிரமாக ஆலோசித்திருக்கிறார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை இவர்கள்தான் கவனித்து வருகின்றனர்.
ஆதாரமில்லாத வழக்கு
இதன்பிறகு தனக்கு வேண்டியவர்களிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் சிதம்பரம். ' இந்திராணி முகர்ஜி வாக்குமூலத்தை வைத்து கார்த்தியைக் கைது செய்திருக்கிறார்கள். அவர் ஒரு கொலைக் குற்றவாளி. ஐ.என்.எக்ஸ் வழக்கில் தவறு நடந்திருக்கிறது என விசாரணை நடத்த உத்தரவிட்டதே நான்தான். அப்படிப்பட்ட என் மீதே இந்த வழக்கை வைத்து ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படை ஆதாரமில்லாத வழக்கு என்று அவர்களுக்கே தெரியும். என்னைப் பழிதீர்ப்பதுதான் அவர்களின் நோக்கம். சட்டரீதியாகவே நான் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே, கார்த்தியைக் கைது செய்திருக்கிறார்கள். டெல்லி ஐகோர்ட்டுக்கு ஹோலி பண்டிக்கைக்காக விடுமுறை அளித்திருக்கிறார்கள். திங்கள்கிழமைதான் நீதிமன்றத்தில் ரிட் மனுவின் மீதான விசாரணை நடக்கும். பக்காவாகாத் திட்டமிட்டு கைது நடவடிக்கையை ஏவியிருக்கிறார்கள். அவர்களா? நானா எனப் பார்த்துக் கொள்ளலாம்' என ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
சட்டப்படி வழக்கு நிற்காது?
அதுவும், கார்த்தி பொறுப்பு வகித்த அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு இந்திராணி முகர்ஜி ரூ10 லட்ச ரூபாய் கொடுத்ததாகச் சொல்கின்றனர். இந்தப் பணம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. காரைக்குடியில் சிதம்பரம் குடும்பம் கட்டிக் கொடுத்த ஒரு அரங்கத்தின் மதிப்பே ரூ7 கோடி ரூபாய். பாரம்பரியமாக செல்வாக்குமிக்க செல்வந்தர் குடும்பம் அது. ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கும் கார்த்திக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவருடைய முன்னாள் ஆடிட்டர் அவர். அட்வான்டேஜ் கம்பெனியின் எந்தப் பொறுப்பிலும் கார்த்தி இல்லை. சட்டப்படி இந்த வழக்கு நிற்கப் போவதில்லை. தேசிய அளவில் சிதம்பரத்துக்கு இருக்கும் மரியாதையை சீர்குலைத்து, காங்கிரஸ் மீது ஒரு தவறான பிம்பத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். இதற்காகவே நீதிமன்றம், மருத்துவமனை என அலைக்கழிக்கின்றனர்" என்கின்றனர் கார்த்தியின் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள். எதற்கும் கலங்க வேண்டாம் என மகனுக்கு ஆறுதல் கூறியபடியே சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் சிதம்பரம்.