சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்டம்... 21 படிகளில் 3000 கொலுக்கள் அணிவகுப்பு!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரம்மாண்ட கொலு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் : பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான கொலுவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. இதனையொட்டி கோயிலில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பிரமாண்டமாக கொலு வைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு நூற்றுக்கால் மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 22 அடி உயரத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமாக கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய பொம்மைகள் முதல் பெரிய பொம்மைகள் வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் அலங்காரமாக வைக்கப்பட்டுள்ளன.
9 தினங்கள் நடக்கும் இந்த நவராத்திரி விழாவில் கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் உள்ள ஊஞ்சலில் சிவகாமசுந்தரி அம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் மற்றும் தீபாராதனை நடப்பது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொலுவை பார்த்து வணங்கி செல்கின்றனர்.
கோயிலில் புராணக்கதைகளை எடுத்துக்காட்டும் வகையில் பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட பரமபதம் காண்போரை பிரமிக்க வைத்துள்ளது. இளம் தலைமுறையினர் புராணங்களை மறந்து வரும் நிலையில், மனிதனின் பரிமாண வளர்ச்சிகளை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த கொலு அனைவரையும் பிரமிக்கச் செய்தது.