சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை: இந்திரா பானர்ஜி உறுதி
சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சமூக செயல்பாட்டாளர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
மனுவில் குழந்தைகள் நலக்குழுவில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்றும் போதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்பு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நீதிபதி இந்திராபானர்ஜி கூறியதாவது, சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்கப்படும். அனைத்து பாலியல் பலாத்கார வழக்குகளும் விரைந்து விசாரிக்கப்படும். நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் பலாத்கார வழக்குகளில் நீதி நிலைநாட்டப்படும் என்று தெரிவித்தார்.
அதேபோல, டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டனர். இது போன்ற சம்பவங்கள் உயர் நீதிமன்றத்தில் வன்முறையைத் தூண்டுவதற்கு காரணமாகிவிடக் கூடாது. அதனால், நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இது குறித்து பரிசீலிப்பதாகக் கூறினார்.