உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் இந்திரா பானர்ஜி.. சென்னை ஹைகோர்ட் பற்றி நெகிழ்ச்சி பேச்சு
பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் எந்த ஒரு நீதிபதிக்கும் மிகச் சிறந்த நீதிமன்றம் என்று இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் எந்த ஒரு நீதிபதிக்கும் மிகச் சிறந்த நீதிமன்றம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியப் பெருமையைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பிரிவு உபசார விழாவில் பேசியதாவது:
"சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒவ்வொரு அங்குலமும் அற்புதமானது. அதன் அறைகள் மிகவும் பெரியது. இந்தோ சார்சானிக் கட்டக்கலையில் அற்புதமாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தின் அழகை பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு குழு புதுப்பித்து பாதுகாப்பார்கள் என்று நம்புகிறேன்.
நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் என்னுடைய பதவி உயர்வுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதற்காக எனது இல்லத்திற்கு வந்திருந்தார். சந்திப்புக்குப் பிறகு அவர் புறப்படும்போது அவரிடம் கூறினேன்.
நான் கடந்த காலத்தில் அவரிடம் இது வரை நான் தனிப்பட்ட முறையில் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை. அதே போல, வருங்காலத்திலும் வைக்கப்போவதில்லை. ஆனால், உங்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை உள்ளது. உயர் நீதிமன்றத்தில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டத்தை உறுதி செய்யவேண்டும். அதில் எந்த தடையும் ஏற்படக் கூடாது. நிதி அளிப்பதில் எந்த தடையும் இருக்க கூடாது என்று கூறினேன். அவரும் உறுதியளித்தார்.
எந்த ஒரு நீதிபதிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சிறந்த நீதிமன்றம். சென்னை உயர் நீதிமன்றம் பாரம்பரியமிக்க ஒரு பெரிய வரலாறு கொண்டது. அதே போல, தமிழ்நாட்டுக்கு கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் மிகப் பெரிய வரலாறு உள்ளது. இங்கே எந்த பயமும் இன்றி, எந்த பாகுபாடும் இன்றிதான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டேன். சென்னையில் மகிழ்ச்சியான தருணங்களை மனதில் எடுத்துச் செல்கிறேன். நான் டெல்லியில் இருந்தாலும் என் மனம் சென்னையில்தான் இருக்கும்" என்று நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
நாளை காலை 10.30 மணிக்கு டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அதில், நீதிபதிகள் ஜோசப், வினீத் சரண் ஆகியோருடன், இந்திரா பானர்ஜியும் பதவி ஏற்றுக்கொள்கிறார்.