முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம் இருக்க உரிமையுள்ளதா? - ஹைகோர்ட் அதிரடி கருத்து
முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம் இருக்க உரிமையுள்ளது என சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை: முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம் இருக்க உரிமையுள்ளது என சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோரின் உண்ணாவிரதத்துக்கு எதிராக சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடு செய்தார்.
தாமாக விசாரிக்கவேண்டும்
உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
சட்டத்திற்கு எதிரானது
இதையடுத்து தேவராஜ் தாக்கல் செய்த மனுவில் ரகசிய காப்பு பதவி பிரமாணத்தை மீறி முதல்வரும் துணை முதல்வரும் உண்ணாவிரதம் இருப்பதாக கூறியிருந்தார். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் தனது மனுவில் தேவராஜன் தெரிவித்திருந்தார்.
தானாக விசாரிக்க மறுப்பு
ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி உண்ணாவிரதம் இருப்பதால் அரசை கலைக்க உத்தரவிட வேண்டும் என்றும் தேவராஜன் தனது மனுவில் கோரியிருந்தார். தானாக முன்வந்து விசாரிக்குமாறும் தேவராஜ் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தானாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.
அனைவருக்கும் உரிமை
இந்நிலையில் அம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் உண்ணாவிரதம் இருக்க உரிமை உள்ளது என தெரிவித்தது. முதல்வர் உட்பட அனைவரும் உண்ணாவிரதம் இருக்க உரிமை உள்ளது என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
இந்திய குடிமக்கள்தான்
முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது இல்லை என்றும் ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. முதல்வர் மற்றும் துணை முதல்வரும் இந்திய குடிமக்கள் தான் என்றும் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.