கருணாநிதி உடல் கவலைக்கிடம்.. முதல்வர் பழனிசாமி டிஜிபி ராஜேந்திரனுடன் ஆலோசனை
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு போலீஸ் டிஜிபி ராஜேந்திரனையும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனையும் அழைத்து ஆலோசனை நடத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவனை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக திரண்டனர். இதனால், மருத்துவமனையில் பதற்றமான நிலை நிலவுகிற்து.
இன்று மதியம் மீண்டும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் மோசமாகி வருவதாக தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
கருணாநிதியின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது என்ற செய்தியால் தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பான பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து பேசினார்கள்.
மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு போலீஸ் டிஜிபி ராஜேந்திரனை அழைத்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனும் உடனிருந்தனர்.