திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்கள்தான் காவல்துறையினரை தாக்கினார்களாம்.. சொல்றது நம்ம முதல்வர்!
திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்கள்தான் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்கள்தான் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போராட்டங்கள் நடத்துவது பேஷனாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அதிமுக அரசு அனுமதி வழங்கவில்லை என்றார்.
Recommended Video
அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடந்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி திட்டம் கொண்டு வரப்பட்டது என்றார். விவசாயிகள் பிரச்னையில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
போராட்டங்கள் ஃபேஷனாகிவிட்டது
மேலும் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்துவது ஃபேஷனாகிவிட்டது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே பிரச்சினையை தூண்டிவிடுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
விஷமிகள் தூண்டிவிடுகின்றனர்
கதிராமங்கலத்தில் விஷமிகளால் போராட்டம் தூண்டிவிடப்பட்டது என்றும் அவர் கூறினார். திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தூண்டிவிடப்பட்ட செயலாகும் என்றார்.
பெண்கள்தான் தாக்கினர்
மேலும் திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்கள்தான் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மதுக்கடைக்கு எதிராக போராடும் பெண்கள் போலீசாரால் தாக்கப்படுகின்றனர் என்ற ராமசாமியின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த முதல்வர் இவ்வாறு கூறினார்.
பதவி உயர்வுக்கு விளக்கம்
மேலும் சமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண் தாக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக கூறிய முதல்வர் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது எந்த புகாரும் வரவில்லை என்றார். அதனால் தான் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது என்றும் முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.
போராட்டங்களை இழிவுபடுத்தி
அண்மையில் கதிராமங்கலம் கிராம மக்கள் மீதான தடியடியை நியாயப்படுத்தி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிராம மக்கள் தான் முதலில் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறினார். அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் போராட்டங்களை இழிவுபடுத்துவது போலவும் பெண்கள் தான் போலீசாரை தாக்கினர் என்றும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.