விசுவாசமிக்க தொண்டராக பணியாற்றியவர் ஏ.கே.போஸ்.. எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றிய ஏ.கே.போஸின் இறப்பு வேதனை தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏ.கே.போஸ் விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றியவர். அவரது இறப்புக்கு உண்மையிலேயே வேதனைப்படுகிறோம் வருந்துகிறோம் என்று தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸுக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மதுரை ஜெய்ஹித்புரத்தில் உள்ள ஏ.கே.போஸின் வீட்டில் அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸின் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "திருப்பரங்குன்றம் எம்எல்ஏ அண்ணன் ஏ.கே.போஸ் விசுவாசமிக்க ஒரு தொண்டனாக பணியாற்றியவர். ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றவர். கட்சிக்காக விசுவாசத்தோடு உழைத்தவர். தன்னுடைய உழைப்பால் கட்சிக்காரர்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். விசுவாசமிக்க ஒரு தொண்டனாக பணியாற்றியவர். அவருடைய இறப்புக்கு உண்மையிலேயே வேதனைப்படுகிறோம். வருத்தப்படுகிறோம் என்று கூறினார்.
இதையடுத்து ஏ.கே.போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஏ.கே.போஸ் முன்மாதிரியான செயல்பாட்டாளராக இருந்தார். அவருக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கை தேர்தல் பணியின்போது நேரில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவரின் பிரிவால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.