அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்
சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்பிக்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக கிட்டத்தட்ட எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்டது. யார் கட்சியை வழிநடத்துகிறார்கள் என்றே தெரியவில்லை. சசிகலாவும், டிடிவி தினகரனும் சிறையில் இருக்கிறார்கள்.
முதல்வர் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி இருந்தாலும் எம்எல்ஏக்கள் கூட அவரை மதிப்பதில்லை என்றே தெரிகிறது ஆள் ஆளுக்கு அமைச்சர் பதவி கேட்டு ஆலோசனை நடத்துகின்றனர். கடந்த மாதம் 20 ஆதிதிராவிடர் எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனை நடத்திய நிலையில் இன்று தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 11 எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு 121 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து வருவதாக கூறப்பட்டாலும் எப்போ யார் கவிழ்பார்களோ என்ற பீதியில் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில்தான் பழனிசாமி அரசு தடுமாறி வருகிறது.
இந்நிலையில் தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் 11 பேர் சென்னையில் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தியதால் பழனிசாமி அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதியில் நடத்திய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரகசிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்று முக்கிய கருத்துக்களை கூறியதாக தெரிகிறது.
முக்கியமாக தோப்பு வெங்கடாசலமும், செந்தில்பாலாஜியும் அமைச்சர் பதவி கேட்டு குடைச்சல் கொடுப்பதாக தெரிகிறது. இதை எப்படி சமாளிப்பது என்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.