ஸ்டாலின் சந்திப்பை தொடர்ந்து பொதுப்பணித்துறை இன்ஜினியர்களுடன் முதல்வர் திடீர் ஆலோசனை
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கிரீன்வேஸ் இல்லத்திற்கு மு.க. ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி உள்ளிட்ட அவரது குடும்பத்தார் சென்று சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினனர்.
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திடீரென முதல்வர் இல்லத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராகவும் கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின் சென்று ஆலோசனை நடத்தியது பல்வேறு யூகங்களை கிளப்பியது.
இந்த நிலையில் ஸ்டாலின் கிளம்பிச் சென்ற சில நிமிடங்கள் கழித்து பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் உடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது.
மெரினா கடற்கரையில் புதிதாக நினைவிடங்கள் அமைக்கக்கூடாது என்று வழக்கறிஞர் காந்திமதி என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் தொடர்ந்து, இந்த வழக்கை இன்று திடீரென வாபஸ் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன், அந்த வழக்கு பற்றி முதல்வர் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.