கரும்புக்கான ஆதாய விலை டன் ஒன்றுக்கு 2,850 ரூபாய் நிர்ணயம் - ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: கரும்புக்கான ஆதாய விலையாக 2,850 ரூபாய் விலை நிர்ணயம் செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கரும்பு உற்பத்தி திறனை அதிகரித்து, கரும்பு உற்பத்தியை பெருக்கும் வகையிலும், சர்க்கரை ஆலைகள் முழு அரவைத் திறனை அடையும் வகையிலும், நிழல்வலை கூடத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்தல், பாசன நீர் மற்றும் உரங்களை திறனுடன் பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனத்தின் மூலம் உரமிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட நீடித்த நவீன கரும்பு உற்பத்தித் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நுண்ணீர் பாசன உபகரணங்களுக்கென சிறு மற்றும் குறு விவசாயகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரும்பு மகசூல் திறனில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயித்து வருகிறது. மத்திய அரசு நிர்ணயம் செய்யும் நியாயமான மற்றும் ஆதாய விலையை விட உயர் அளவில் இந்த பரிந்துரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
2015-2016 ஆம் ஆண்டிற்கான கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 550 ரூபாய் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு நடப்பு கரும்புப் பருவத்தில் டன் ஒன்றுக்கு 2,850 ரூபாய் கிடைக்கும். அரசின் இந்த நடவடிக்கை, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மனமகிழ்ச்சியினை அளிக்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.