மதுரை அருகே அரசு பேருந்து - லாரி விபத்தில் 14 பேர் பலி: ஜெயலலிதா நிவராண உதவி அறிவிப்பு !
சென்னை: மதுரை அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்கு முதல்வர் ஜெயலிலதா ஆழ்ந்த இரங்கலையும், நிவாரண உதவியும் அறிவித்துள்ளார்.
மதுரையில் டி. கல்லுப்பட்டி அருகே சுப்புலாப்புரம் என்ற இடத்தில் அரசுப் பேருந்தும் சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நடந்த விபத்து குறித்த செய்தி கேட்டு தாம் மிகவும் வருந்தியதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் பிரார்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம்:
1. கூடலிங்கம் (40), வளையப்பட்டி
2. சுருளிராஜன் (42), பெரியகுளம்
3. முத்துக்குமார் (32) லாரி ஓட்டுனர், சுந்தரேசபுரம், கடையநல்லூர்.
4. செல்வராஜ் (65), வள்ளியூர்
5. கோவிந்தராஜ் (50), வத்திராயிருப்பு.
இவர்கள் உடல்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன
6. முருகேசன் (49), அரசு பேருந்து ஓட்டுனர், வீரபாண்டி
7. பாலன் (60), உத்தமபாளையம்
இவர்களின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவ குழுவிடம் கேட்டுக்கொண்டனர்.