12ம் தேதி தேர்தலில் வாக்களிக்க வாங்க.... ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிப்பு
வரும் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 12-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் எப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 16ஆம் தேதி தொடங்கியது.
திமுக, அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓபிஎஸ் அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, என ஆர்.கே. நகரில் பலமுனை போட்டி நிலவுகிறது. ஆர்.கே.நகரில் போட்டியிட 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நாளான இன்று ஓ.பி.எஸ் அணியின் மதுசூதனன், சசிகலா அணியின் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கங்கை அமரன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனர் தீபா, சமக வேட்பாளர் அந்தோனி சேவியர் ஆகியோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திருப்பப் பெற 27 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 12-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கவர்னரின் உத்தரவின்பேரில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையின் பிற பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் வேலை பார்க்கும் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.