போயஸ் கார்டன் வீட்டில் ஜெ.வைச் சந்தித்தார் தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன்?
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதையடுத்து தமிழக முதல்வர் பதவியை இழந்தார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. பெங்களூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா பொது இடங்களுக்குச் செல்வதை நிறுத்தினார்.
போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலேயே இருந்தபடி முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை ஜெயலலிதா சந்தித்து வருவதாக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஜெயலலிதாவைச் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோல், உள்துறைச் செயலாளர் அபூர்வவர்மா, தமிழக முதல்வரின் ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவை இன்று சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.