முதல்வருடன் அமைச்சர்கள், அதிகாரிகள்... போட்டோவில் கட்டிங்... ஒட்டிங்... நடந்தது என்ன?
சென்னை: சட்டசபைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போட்டோஷாப் முறையில் ஒட்டு வேலை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகைப்படங்கள் ஏன் ஒட்டு வேலை பார்க்கப்பட்டது என்றும் சமூகவலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. முன்னதாக சட்டசபைக்கு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார், சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதேபோல அமைச்சர்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற புகைப்படங்களையும் தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தது.
அனைத்து புகைப்படங்களிலும் ஒருவித செயற்கைத்தனம், அதாவது போட்டோ ஷாப் முறையில் வெட்டி ஒட்டியிருந்தது தெரிகிறது. உற்று நோக்கினால் உங்களது கண்களுக்கும் மேலும் சில குறைபாடுகள் தெரியவரலாம்.
புகைப்படம் எடுத்தபோது ஏதோ குளறுபடி நடந்து, அதனை சமாளிப்பதற்காக இந்த அரை குறை ஒட்டு வேலைகள் நடந்திருக்கலாம் என, இந்த புகைப்படங்களை வைத்து சமூக வலைத்தளங்களில் ஏகத்திற்கும் விமர்சனம் செய்தும், கிண்டலடித்தும் வருகின்றனர்.