தம்மாத்தூண்டு கொசு.. எப்படியெல்லாம் உயிரை குடிக்குது!
கொசுக்கள் பரவாமல் சுற்றுப்புறத்தை நாம் வைத்து கொள்ள வேண்டும்.
சென்னை: உலகிலேயே மிக ஆபத்தான உயிர்க்கொல்லி எது தெரியுமா? ஓங்கி வளர்ந்து யானையோ, குதிரையோ இல்லை... திடபலத்துடன் கர்ஜிக்கும் சிங்கம், புலியும் இல்லை... இத்துனூண்டு இருக்கும் கொசுதான்!!
மிக மிக அற்பமான உயிரினம் என்றும், கொசுதானே என்றும் கேலி பேசுகிறோமே... இந்த கொசுவால்தான் அதிகம் பேர் ஒவ்வொரு ஆண்டும் உலகில் இறந்திருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா? உலகிலேயே மிகவும் கொடூரமான விலங்கினமும் கொசுதான்.
அப்படிப்பட்ட கொசுக்கள் ஏற்படுத்தும் அபாயகரமான நோய்தான் சிக்கன் குனியா. 2006-ம் ஆண்டிலிருந்துதான் இந்த நோய் இந்தியாவுக்கு ஏடிஸ் என்னும் கொசுக்கள் கடிப்பதன் மூலமாக நுழைந்தது. பின்னர் பல்வேறு மாநிலங்களில் றெக்கை கட்டியும் பறந்தது.
3 மாதங்கள்
நம் நாட்டில், கழிவுநீர், குப்பை அகற்றம் எல்லாமே செயலிழந்து கிடக்கிறது. நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை குப்பைகள் மலை போலவும், சாக்கடைகள் ஆறுபோலவும் நாறிக்கொண்டிருக்கின்றன. இவற்றில்தான் அதிக அளவில் கொசுக்கள் பரவுவதாக கூறப்படுகிறது. சாதாரண காய்ச்சல் என துவங்கி பிறகு தன் வேலையை காட்ட துவங்குகிறது இந்த சிக்கன்குனியா. 3 நாள் காய்ச்சல் கடைசியில் 3 மாதங்கள் வரை நோயாளிகளை படுக்கையில் கட்டிப் போட்டு விடுகிறது.
பட்டப்பகலில் கடிக்கும்
இப்படி ஆளுயர மக்களை நோயில் தள்ளுவதே இந்த சிறிய கொசுக்கள் என்றாலும், இதை தடுப்பதற்கோ, நோய் வந்தபின் சிகிச்சை அளிப்பதற்கோ இதுக்கென பிரத்யேகமான மருந்துகள் இல்லாமல் போனதுதான் விஞ்ஞான வளர்ச்சியின் கொடுமை! கொசு கடித்து சிக்கன்குனியாவே வந்தாலும் காய்ச்சலுக்கும் உடல்வலிக்கும் வழக்கமான பாராசிட்டமால்தான்!! இத்தனைக்கும் இந்த கொசுக்கள் நாம் விழித்திருந்து நடமாடும் பட்டப்பகலில்தான் கடிக்குமாம்!!
கொசு ஒழிப்பு திட்டம்
எந்த நோயுமே, "வேகமாக பரவுகிறது" என்ற தலைப்பிட்டு செய்தி போட்டால்தான் நம் ஆரோக்கியத்தை பற்றியே யோசிக்கிறோம். அவ்வாறு இல்லாமல், எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கக்கூடிய நிலையை நாம் ஏற்படுத்தி கொள்ளத்தான் வேண்டும்! இருநூறு வருடங்களுக்கும் மேலாக நம் நாட்டில் மலேரியா, டெங்குவும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நோய்களை பரப்பும் கொசுக்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் வருடா வருடத்திற்கு கொசுக்களை ஒழிக்க பட்ஜெட் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். வருடம்தான் போகிறது... இந்த கொசுக்கள் இன்னும் ஒழிந்தபாடில்லை.
சுற்றுப்புறத் தூய்மை
கை கால்கள் மடங்கி குனிந்த நிலையில் இருப்பதால் 'சிக்கன் குனியா' என்ற பெயர் எல்லாம் சூட்டப்பட்டுவிட்டது. ஆனால் இதற்கு இன்னும் மருந்தைதான் காணோம். சுற்றுப்புறத் தூய்மை என்பதுதான் இந்த சிக்கன்குனியாவுக்கு சிறந்த மருந்தாகவும், தடுப்பாகவும், வேலியாகவும், இருக்க முடியும்!