அம்மாவின் சத்துமாத்திரையை சாக்லேட் என்று சாப்பிட்ட குழந்தை பலி- சென்னையில் பரிதாபம்!
சென்னை: சென்னை அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து எடுத்து விழுங்கிய 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏழுகிணறு அப்பாசாமி சந்து பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் மனைவி பாளையம். அதே பகுதியில் சந்தோஷ், காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு ரித்திகா என்ற 4 வயது பெண் குழந்தையும், சஞ்சய் என்ற 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
பாளையத்திற்கு குழந்தை பிறந்ததையொட்டி, பாளையத்திற்கு சத்து மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் கொடுத்துள்ளனர். கடந்த 12ம் தேதி வீட்டில் மருந்து, மாத்திரைகளை பாளையம் கீழே வைத்து விட்டு சமையல் செய்ய சென்றுள்ளார்.
அப்போது, விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ரித்திகா அங்கு வைக்கப்பட்டிருந்த மாத்திரையை மிட்டாய் என நினைத்து வாயில் போட்டு விழுங்கி விட்டாள். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தாள்.
குழந்தை திடீரென மயங்கி விழுந்ததை பார்த்த தாய் பாளையம் பதறியடித்து கதறினார். உடனே, குழந்தையை தூக்கிக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று குழந்தை ரித்திகா பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து, ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.