சென்னையில் பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிய கொடூரன்கள் 2 பேர் கைது
சென்னை: சென்னை அம்பத்தூரில் விளையாட சென்ற இரண்டரை வயது குழந்தைக்கு மதுவை ஊற்றி வேடிக்கை பார்த்த குடிவெறியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ந்து பிஞ்சு குழந்தைகளுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து வேடிக்கை பார்க்கும் கொடுமை அரங்கேறி வருகிறது. தற்போது சென்னை அம்பத்தூரில் இப்படியான ஒரு விபரீதம் நிகழ்ந்திருக்கிறது.
அம்பத்தூர் மேனாம்பேட்டைச் சேர்ந்த தனலட்சுமியின் இரண்டரை வயது மகன் தானு விளையாட சென்றிருக்கிறான். பின் வீடு திரும்பிய குழந்தை தானு மயக்க நிலையில் வந்திருக்கிறான்.
உடனே பதறிப் போன தாய் மருத்துவர்களிடம் தூக்கிக் கொண்டு ஓடினார். அங்கு அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. குழந்தை தானுவுக்கு யாரோ சில விஷமிகள் மதுவை ஊற்றிக் கொடுத்திருக்கிறார்கள் என மருத்துவர்கள் கூறினர்.
இதனையடுத்து போலிசீல் தாய் தனலட்சுமி புகார் தெரிவித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தானுவுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்ததாக செல்வம், பழனி இருவரும் சிக்கினர்.
இவர்கள் இருவரையும் கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர் போலீசார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.