தொடரும் குழந்தை கடத்தல்.. போராடும் அமைப்புகள்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
குழந்தை கடத்தலுக்கு எதிராக நடந்து வரும் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையை சுழற்றி உள்ளது.
சென்னை: குழந்தை கடத்தலுக்கு எதிராக நடந்து வரும் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையை சுழற்றி உள்ளது. இதில் எக்ஸ்னோரா அமைப்பும், வழக்கு தொடுத்தவர்களும் முக்கியமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து தற்போது எக்ஸ்னோரா அமைப்பின் கிருஷ்ணகுமார் பேட்டியளித்துள்ளார். அதில் 8 மாத மற்றும் 9 மாத குழந்தை ரோஷன் மற்றும் சரண்யா என்ற இரண்டு குழந்தைகள் கடந்த 2016ல் கடத்தப்பட்டனர். இவர்கள் காணாமல் போய் இரண்டரை வருடம் ஆகிறது. இதற்காக நாங்கள் அப்போதே போலீசில் புகார் அளித்தோம். அப்போதைய சென்னை சிட்டி கமிஷன் ராஜேந்திர பிரசாத்திடம் புகார் அளித்தோம்.
அதேபோல் குழந்தைகளை மீட்க வேண்டுமென நடிகர் பார்த்திபன், எக்ஸ்னோரா நிர்மல், லதா ரஜினிகாந்த் ஆகியோர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். அதன்பின் நிர்மல் கொடுத்த ஊக்கத்தின் மூலம், எக்ஸ்னோரா மூலம், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தோம்.
ஆனால் அதன்பிறகுதான், இதில் பெரிய பிரச்சனை இருப்பது தெரிந்தது. ஆயிரக்கணக்கில் குழந்தைகள் காணாமல் போவது தெரிய வந்துள்ளது. லட்சக்கணக்கில் தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போய் இருக்கிறார்கள்.
நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் இந்த வழக்கை விசாரித்தனர். தமிழகத்தில் அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இருந்தது, ஆனால் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இல்லை. இதனால் அதற்கு தனி பிரிவு உருவாக்க கோரினோம். அதன்பின்தான் குழந்தைகளுக்காக தனி கடத்தல் பிரிவு உருவாக்கப்பட்டது.
அதன்பின் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது குழந்தை கடத்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும் எக்ஸ்னோரே அமைப்பு சார்பில் குஜராத்திற்கு தமிழக குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
குஜராத்தில் 350 குழந்தைகள் பிச்சை எடுக்கிறார்கள், அதில் 6 தமிழ் குழந்தைங்கள் பற்றி சிபிஐயிடம் அறிக்கை அளித்துள்ளோம். அதேபோல் தற்போது குஜராத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் செப்டம்பர் 24ஆம் தேதியன்று குழந்தை கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கும்படி நீதிபதிகள் கூறியுள்ளனர். அதில் தமிழக உள்துறை மற்றும் சமூக நலத்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர், என்றுள்ளார்.