காதல், கள்ளக்காதல், கடத்தல், கைது.. அதிர வைத்த 25 வயது பெண்.. திருப்பத்தூரில் ஒரு திடீர் திருப்பம்!
ஆண் குழந்தையை கடத்திய பெண் 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்
திருப்பத்தூர்: காதல், கல்யாணம், கள்ளக்காதல், கடத்தல், கைது என எல்லாவற்றையும் 25 வயசிலேயே அனுபவித்து அதிர வைத்துள்ளார் ஒரு இளம்பெண்!!
திருப்பத்தூர் அடுத்த சிங்காரப்பேட்டை மொசலிக்கொட்டாய் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஷெரீப் - ரோசின் சுல்தானா... 2 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சுல்தானாவை பிரசவத்துக்கு அனுமதித்திருந்தனர்.. இது அவருக்கு 3-வதுபிரசவம்.
அழகான ஆண்குழந்தையும் பிறந்தது... ஆஸ்பத்திரியில் தாயும்-சேயும் இருந்தனர்.. அப்போது நேற்று காலை 9 மணிக்கு பர்தா அணிந்த பெண் ஒருவர் சுல்தானா இருந்த அந்த பிரசவ வார்டுக்குள் நுழைந்தார்.
67 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலை.. பொதுமக்கள் ஹேப்பி
அக்கா குழந்தை
அந்த பெண் நேராக வந்து சுல்தானாவிடம் பேச்சு தந்தார்.. தன்னுடைய அக்காவையும் அதே வார்டில் அனுமதித்துள்ளதாகவும், அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் சொன்னார். பிறகு "என் அக்காவுக்கு ஆண் குழந்தை என்றால் ரொம்ப பிடிக்கும், ஆனா பொண்ணா பொறந்துடுச்சு.. உங்க குழந்தையை கொஞ்ச நேரம் தந்தீங்கன்னா, என் அக்காகிட்ட காட்டிட்டு உடனே தூக்கிட்டு வந்துடறேன்" என்றார் அந்த பெண்.
பர்தா
சுல்தானாவும் சரி என்று குழந்தையை எடுத்து அந்த பெண்ணிடம் தந்தார்.. ஆனால் ரொம்ப நேரமாகியும் அந்த பர்தா போட்ட பெண் திரும்பி வராததால், சுல்தானா அங்கிருந்த டாக்டர்களிடம் விஷயத்தை சொல்லி அழுதார்.. இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் திருப்பத்தூர் நகர போலீஸில் புகார் தரவும், அவர்கள் விரைந்து தவந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
சிசிடிவி
அப்போது பர்தா போட்ட பெண். அந்த குழந்தையை தூக்கி கொண்டு வெளியேறுவது பதிவாகி இருந்தது.. மேலும் அந்த பெண்ணின் முகம் வீடியோவில் தெளிவாக தெரியவும், விசாரணைக்கு அது பெரிதும் உதவியது.. அந்த பெண் திருப்பத்தூர் தேவாங்கர் நகரை சேர்ந்த நஹனா என்பதும், 25 வயது என்பதும் தெரிந்தது.. உடனடியாக நஹனாவின் வீட்டுக்கு போலீசார் சென்றனர்.
நஹனா
அங்கே துணிகளுக்கு அடியில் குழந்தையை நஹனா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து குழந்தையை மீட்டு, பெற்றோரிடம் தந்தனர்.. நஹனாவை கைது செய்து விசாரித்தால் போலீசாருக்கு தலையே சுற்றிவிட்டது. அப்போது அவர் சொன்னதாவது: "நான் ஒருத்தரை காதலித்தேன்.. கல்யாணமும் செய்து கொண்டேன்.. 2 வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது.
கள்ள உறவு
அதனால் நான் அவரை பிரிந்து வந்துவிட்டேன்.. என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இன்னொருவருடன் கள்ள உறவு ஏற்பட்டது.. ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருகிறோம்.. நான் கர்ப்பமாகவில்லை என்பதற்காக என்னுடன் அவர் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்.. அதனால் ஏதாவது குழந்தையை கடத்தி, அவருக்குதான் அந்த குழந்தை பிறந்தது என்று நம்பவைத்தால், கல்யாணம் செய்து கொள்வார் என்று பிளான் செய்தேன்.
கைது
அதற்காக இந்த 6 மாசமாக கர்ப்பமானதுபோல நடித்து ஏமாற்றினேன்.. பிறகு பிரசவ வலி வந்துவிட்டதாக சொல்லி ஆஸ்பத்திரிக்கும் வந்துவிட்டேன். அப்பதான் இந்த குழந்தையை பார்த்தேன்.. பிறந்து 2 நாள் ஆகவும், இதையே கடத்தி கொண்டு போகலாம் என முடிவு செய்தேன்" என்றார். இதையடுத்து நஹனாவை போலீசார் கைது செய்தனர்.. இவ்வளவையும் நம் போலீசார் வெறும் 2 மணி நேரத்தில் செய்து முடித்தனர்.. கடத்தப்பட்ட 2 மணி நேரத்திலேயே குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டதால், போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.