கள்ளக்குறிச்சி: குடும்ப தகராறில் பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தந்தை கைது
பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்,
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே குடும்ப தகராறில் பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்,.
கள்ளக்குறிச்சி அடுத்து உள்ள கிராமம் கருந்தலாக்குறிச்சி. இங்கு வசித்து வருபவர் அருள்மணி. இவரது மனைவி அஞ்சலை. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
தம்பதி இருவரிடையே எந்நேரமும் சண்டையும், தகராறும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தில் பலபேர் தலையிட்டும், இவர்களிடையே நீண்ட காலமாக ஏற்பட்டு வரும் பிரச்சினையை தீர்க்க வைக்க முடியவில்லை என தெரிகிறது.
இதேபோல இருவருக்குள்ளும் சமீபத்தில் கூட ஒரு தகராறு ஏற்படவே, அஞ்சலை மருதூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்துள்ளார். இதனால் கோபமடைந்த அருள்மணி, நேராக மனைவியின் வீட்டுக்கு சென்றார். தாய் வீட்டிலேயே தங்கி உள்ளதை பற்றி அவர்களுக்குள் தகராறு வெடித்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அருள்மணி, அஞ்சலைக்கு தெரியாமல் அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தையை தூக்கி, சொரக்காபாளையம் பகுதியிலுள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றில் வீசினார். இதில் குழந்தை கிணற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது.
பெற்ற குழந்தையை தந்தையே தூக்கி சென்று கொலை செய்தது குறித்து உடனடியாக கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அருள்மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.