சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம்? தீட்சிதர்கள் மீது புகார்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் குழந்தை திருமணத்தை செய்து வைப்பதாக அவர்கள் மீது கோட்டாட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணத்தை தீட்சிதர்கள் நடத்தி வைப்பதாக அரசியல் கட்சியினர் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது வந்தது. இந்நிலையில் அந்தக் கோயிலை அவர்கள் முறையாக பராமரிக்க வில்லை என்று குற்றம்சாட்டிய தமிழக அரசு அக்கோயிலை கையகப்படுத்தி ஆணை பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்க வேண்டும் என்றும் ஆனால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்தது.
இதனால் கடந்த 2014-ஆம் ஆண்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணங்களை தீட்சிதர்கள் செய்து வைப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குழந்தை திருமணத்தை தடுக்கக் கோரி கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், பாமக ஆகிய கட்சிகள் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளன. மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று சிதம்பரம் நகர முன்னாள் தலைவர் சந்திர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.