நெல்லையில் 16 வயது சிறுமிக்கு திருமணம்... தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!
திருநெல்வேலி அருகே 16 வயது மாணவகிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி : திருநெல்வேலியில் குழந்தைத் திருமணம் செய்ய முயன்ற நிகழ்வை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் பெற்றோரிடம் அந்தப் பெண் தொடர்ந்து பள்ளிப்படிப்பை தொடரும் வகையிலும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் தாலுகா காட்டுமலையை சேர்ந்த கொம்பையன் மகன் முருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் கரட்டுமலை கருணைகாத்த மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடக்க இருந்தது.
இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பு மூலம் நெல்லை கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது உத்தரவுபடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்த், பாலமுருகன் என்ற அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். பாலமுருகன் இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தையடுத்து அனைத்து மகளிர் நிலைய பெண் காவலர்கள் மண்டபத்திற்கு விரைந்து மணப்பெண்ணை விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குழந்தை திருமணம் தவறு. 18 வயது முடித்தவுடன் திருமணம் செய்ய வேண்டும். அதற்குள் திருமணம் செய்தால் குடும்பம் தொடர்பான விபரம் அவளுக்கு எப்படி தெரியும். இதில் பல்வேறு மனம், உடல் சார்ந்த சிக்கல்கள் ஏற்படும் என்று எடுத்து கூறியதை இருவரது பெற்றோரும் ஏற்று கொண்டனர்.
மேலும் அந்த மாணவி படிப்பை தொடரவும், 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாகவும் இருவரது பெற்றோரிடமும் போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். அந்த மாணவி தொடர்ந்து பள்ளிக்கு சென்று படிக்கிறாரா என்று கண்காணிக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.