10 மாநிலம்.. 5 மாதம்.. 22 கொலை.. இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு வாட்ஸ் ஆப் வதந்தி!
மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 22 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 22 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த வருட தொடக்கத்தில்தான் அந்த வாட்ஸ் ஆப் மெசேஜ் வலம் வர தொடங்கியது. பொதுவாக வாட்ஸ் ஆப்பில் என்ன வந்தாலும் அதை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு பார்வேர்ட் செய்யும் சிலர் அப்படியே பார்வேர்ட் செய்திருக்கிறார்கள்.
உங்கள் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துகிறது. பாதுகாப்பாக இருங்கள். சந்தேகப்படும்படி யாரையாவது பார்த்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் என்று அந்த வாட்ஸ் ஆப் வதந்தியில் இடம்பெற்றுள்ளது.
எங்கு
இது தமிழ்நாட்டில் மட்டும் வலம் வரவில்லை. இந்தியா முழுக்க நிறைய மாநிலங்களில் இந்த மெசேஜ் சுற்றியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான் , ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் எல்லா இத பொய்யான தகவல் சென்றுள்ளது. இது தமிழ் தொடங்கி எல்லா மொழிகளிலும் பரவி உள்ளது.
வேறு மாநிலத்தில் பிரச்சனை
இந்த மெசேஜ் முக்கியமாக மாநில பிரிவினையை குறிவைத்துள்ளது. வடஇந்தியாவில் பரவிய பெங்காலி, இந்தி, மராத்தி மெசேஜ்கள் எல்லாம் தென்னிந்திய தோற்றம் கொண்ட நபர்கள்தான் குழந்தைகளை கடத்துகிறார்கள் என்று கூறியுள்ளது. அதேபோல், தென்னிந்தியாவில், வடஇந்தியர்கள் நம்மாநிலத்திற்கு வந்து குழந்தைகளை கடத்துகிறார்கள் என்று வதந்தி பரப்பி இருக்கிறது. இது மக்களை அதிக அளவில் தூண்டிவிட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து
தமிழகத்தில் பரவிய இந்த வாட்ஸ் ஆப் வதந்தி கொஞ்சம் வித்தியாசமானது. அதன்படி வடஇந்தியாவில் இருந்து 400 குழந்தை கடத்தும் நபர்கள் கும்பலாக வந்துள்ளனர். இந்த 400 பேர் கொண்ட படை, ஊர் ஊராக சென்று குழந்தைகளை கடத்துகிறார்கள், என்றுள்ளது. ஆனால் அப்படி யாருமே வரவில்லை. ஆனால் இந்த மோசமான வதந்தி காரணமாக திருவண்ணாமலையில் ருக்மணி என்ற மூதாட்டியும், திருவள்ளூரில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
எத்தனை
மொத்தம் இந்த வதந்தி காரணமாக, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 22 பேர் கடந்த ஐந்து மாதங்களில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஜார்கண்டில் மட்டும் மொத்தம் 9 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 2 பேர் என்று 8 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
யார் அனுப்பியது
இதை யார் அனுப்பியது, எங்கு முதலில் உருவானது என்று இன்னும் விவரம் தெரியவில்லை. எல்லா மொழியிலும் இருப்பதால், இதை திட்டமிட்டு ஒரு கும்பல் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இது முதலில் ஜார்கண்டில் உருவாகி இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்குதான் இதனால் முதல் கொலை அரங்கேறியது.