அங்கீகாரம் பெறாத குழந்தைகள் காப்பகங்கள் 3 மாதத்தில் மூடப்படும்: தமிழக அரசு
சென்னை: அங்கீகாரம் பெறாத குழந்தைகள் காப்பகங்கள் மூன்று மாதத்தில் மூடப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கிவரும் குழந்தைகள் காப்பகங்களை முறைபடுத்த வேண்டும்.
முறையான அனுமதி பெறாத காப்பகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு மட்டுமல்லாது குழந்கைகள் காப்பகத்திற்கான நிபந்தனைகளையும் முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 பரிந்துரைகளை மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு தொடர்பாக சமூக நலத்துறை செய்லாளர்கள், சமூக பாதுகாப்புத்துறை செயலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தனர். அப்போது மூடப்படும் காப்பகங்களைச் சேர்ந்த குழந்தைகள், வேறு காப்பகங்களுக்கு மாற்றப்படுவார்கள் என தமிழக அரசு உறுதியளித்தது.
மத அமைப்புகள் நடத்தும் காப்பகங்களில் ஆய்வு ஆய்வு நடத்தவும், பெற்றோரின் அனுமதியுடன்தான் அங்கு குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கை வருகிற மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.