சட்டவிரோத சீனப் பட்டாசுகளை அழிக்க சிறப்பு படைகள்.. தமிழக அரசு அமைத்தது
சென்னை: தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் சீன பட்டாசுகளை கண்டுபிடித்து அழிப்பதற்கு தமிழகம் முழுவதும் 36 சிறப்பு படைகளை அமைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரொ பட்டாசு விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் எம்.சேக் அப்துல்லா. இவர், ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "சிவகாசியில் பட்டாசுகளை வாங்கி வந்து பூக்கடை பகுதியில் நாங்கள் விற்பனை செய்து வந்தோம். ஹைகோர்ட்டின் உத்தரவின்படி கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை காலத்தில் தீவுத்திடலில் தற்காலிகமாக கடை அமைத்து பட்டாசுகளை விற்பனை செய்து வந்தோம். இதற்காக தீவு திடலில் கடைகளை அமைக்கும் இடங்களை தமிழக சுற்றுலா துறை ஏலம் மூலம் வழங்கி வருகிறது.
ஆரம்பக்காலங்களில் குறைவான குத்தகை தொகை வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது பெருந்தொகையை சுற்றுலா துறை அதிகாரிகள் வசூலிக்கின்றனர். குத்தகை தொகை அதிகம் செலுத்தவேண்டியதுள்ளதால், பட்டாசு வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 200 சதுர அடி நிலத்துக்கு சுற்றுலா துறை அதிகாரிகள் ரூபாய் 75 ஆயிரம் குத்தகை தொகை நிர்ணயம் செய்துள்ளனர். இதனால், குறைவான பட்டாசுகளை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கவேண்டியது வரும்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்து விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். இதனால், உள்நாட்டு தயாரிப்பான சிவகாசி பட்டாசுகளுக்கு விற்பனை பாதிக்கப்படும். எனவே, இந்த ஹைகோர்ட் இந்த விஷயத்தில் தலையிட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள், "தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளை கொண்டு சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 4 சிறப்பு படைகளும், விருதுநகர் மாவட்டத்தில் 2 சிறப்பு படைகளும், பிற மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு படையும் என மொத்தம் 36 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு படை அதிகாரிகள், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சீன பட்டாசுகளை பறிமுதல் செய்து அழித்துள்ளனர். பிற இடங்களிலும் இந்த அதிகாரிகள் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர்" என்று கூறினார்கள்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கு விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படை அதிகாரிகள் சீன பட்டாசுகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை விவரங்களை அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.