மீட்புப் பணிகளை துரிதப்படுத்த சிரஞ்சீவி வேண்டுகோள்!
சென்னை: மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினால் மட்டுமே இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்க முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி கூறியுள்ளார்.
மவுலிவாக்கத்தில் நேற்று அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நலம் விசாரித்த பின்னர் சிரஞ்சீவி ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,
இது ஒரு மிகப்பெரிய துயர சம்பவம். இந்த விபத்து முற்றிலும் மனித தவறுகளால் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, மீட்பு பணிகள் வேகமாக நடைபெறுகிறது. இந்த மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும். அப்படி துரிதப்படுத்தினால் மட்டுமே உயிருடன் இருப்பவர்களை வேகமாக மீட்க முடியும்.
தற்போது ஆந்திர முதல்வர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்துள்ளார்கள். காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த தொகைகளை 2 மடங்காக அதிகரித்து வழங்க வேண்டும் என்றார் அவர்.