ஓவியமாய் காட்சியளிக்கும் சிவபெருமான்: சித்திரசபையின் சிறப்பு
குற்றாலம்: தமிழகத்தில் சிவ பெருமான் நடனமாடிய பஞ்ச சபைகளுள் மிகவும் பழமையானது குற்றாலம் சித்திர சபை. சித்திரசபை மூலிகை ஓவியங்கள் 600-ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பொலிவு பெற்றுள்ளன.
குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவிலின் துணைக் கோவிலான சித்திரசபை, குற்றாலநாதர் கோவிலுக்கு வடபகுதியில் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.
சிவபெருமானின் பஞ்சபைகள்
திருவாலங்காடு - இரத்னசபை, தில்லை(சிதம்பரம்) - கனகசபை, திருவாலவாய் - வெள்ளிசபை, திருநெல்வேலி - தாமிரசபை, திருக்குற்றாலம் - சித்திரசபை மற்ற 4 சபைகளில் நடராஜர் விக்கிரமாகக் காட்சியளிக்கிறார். இங்கு ஓவியமாக காட்சியளிக்கிறார்.
திரிபுரதாண்டவம்
பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெறுகின்றதென்று திருப்பத்தூர் புராணம் கூறுகிறது. திரிகூடமலைக்கு வந்து திருமாலும், பிரம்மாவும், தேவர்களும் தவம் செய்ய, அவர்களுக்காக இறைவன் திருக்கூத்து தரிசனம் தந்தார் என்கின்றன புராணங்கள்.
அழகான தெப்பக்குளம்
சித்திரசபைக்கு முன்னர் தெப்பக்குளமும் அதன் மத்தியில் உயர்ந்த கோபுரமுள்ள நீராழி மண்டபமும் மிக அழகுடன் விளங்குகிறது. சபையில் நடராஜபெருமான்தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார்.
இறைவனுக்கு வழிபாடு
மார்கழி திருவாதிரை திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோவிலில் பூஜைகள் நடத்தப்படும். ஐப்பசி திருவிழா, சித்திரை விஷுத் திருவிழாவின்போது, சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுவது சிறப்பாகும்.
ஓவியவடிவில் இறைவன்
தமிழகத்திலுள்ள ஐந்து சபைகளுள், குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மட்டுமே பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வகையில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இறைவன் ஓவிய வடிவில் காட்சியளிக்கிறார்.
பிரம்மன் தீட்டிய ஓவியம்
சடையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக்கண்டு பிரம்மதேவன் ஆதிசக்தி சிவபிரானுடைய சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசகர் முதலியோர் இதனைச்சித்திரசபை என்று அழைத்தனர். தேவர்கள் தினமும் வந்து சித்திரசபையை தரிசித்து செல்கின்றனர் என்பது நம்பிக்கையாகும்.
பராக்கிரம பாண்டியன்
கி.பி.16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இச்சபை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். காசி பராக்கிரமபாண்டியனால் இச்சபை கட்ட ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பின்னர் உதயமார்த்தாண்டவர்மனால் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
குற்றாலத்தில் இறைவன்
நடராஜபெருமாள் வடக்கே உள்ள திருவாலங்காட்டை விட்டு தெற்கே குற்றாலத்தை நோக்கி வந்தது இங்கு வீசும் தென்றல் காற்றில் இளைப்பாறவும், தீந்தமிழை அனுபவிக்கவும் என்று பரஞ்ஜோதி முனிவர் கூறுகியிருக்கிறார்.
பிரமீடு வடிவ ஆலயம்
சித்திரசபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பிரமிடு அமைப்பின் நிழலும், தாமிரத் தகடுகளின் மணமும் மனதுக்கு அமைதியைத் தருவது கூடுதல் சிறப்பு.
பழமையான ஓவியங்கள்
சித்திரசபையில் உள்ள சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் மூலிகைகளால் வரையப்பட்டவை. 50 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில், கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்றபோதும்கூட மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கப்படவில்லை.
புதுப்பிக்கப்பட்ட ஓவியங்கள்
இதனால் ஓவியங்கள் சேதமடையத் தொடங்கியதையடுத்து, ஓவியங்களைப் புதுப்பிக்கும் பணி கடந்த 2007-ல் தொடங்கியது. கரூர் செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பக்தர் வீ.கே.தங்கவேல் மூலிகை ஓவியங்களைப் புதுப்பிப்பதற்கான செலவுத் தொகையாக ரூ.30 லட்சத்து 35 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார். ஓவியங்கள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
மனம் கவரும் ஓவியங்கள்
வைணவக் கோவிலான குற்றாலநாதர் கோவில் சைவ கோவிலாக மாற்றப்பட்டது, இறைவனின் திருமணக் காட்சி, கஜேந்திரமோட்சம் ஆகிய தல வரலாற்றுச் செய்திகள், 63 நாயன்மார்கள், பத்மநாபசுவாமிகளின் அனந்தசயனம், மதுரை மீனாட்சியம்மனின் திருவிளையாடல் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளன.
ரதி-மன்மதன்
ரதி-மன்மதன், ஸ்ரீராமரின் பட்டாபிஷேகம், வாலிவதம் ஆகிய நிகழ்வுகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் முருகனின் சூரசம்ஹாரம் வரையப்பட்டுள்ள ஓவியக்காட்சி காண்பவர்களின் மனதைக் கவர்கிறது.
தரிசிப்பது சிறப்பு
குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் குளித்துச் செல்லும் சுற்றுலா பயணிகள் இறைவனின் பஞ்சபைகளில் ஒன்றான சித்திரசபையை கண்டு தரிசித்து செல்லவேண்டும். அதற்கான விழிப்புணர்வை இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர் கோவிலை நிர்வகிக்கும் சமூக ஆர்வலர்கள்.