மதுரை சித்திரை திருவிழா: வறண்ட வைகை... மே 10ல் தண்ணீர் தொட்டியில் இறங்கும் கள்ளழகர்
கடுமையான வறட்சியினால் வைகை ஆறு வறண்டுள்ளதால் மே 10ஆம் தேதியன்று தற்காலிகமாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் கள்ளழகர் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
மதுரை: தமிழகத்தின் மிக பிரம்மாண்ட திருவிழாவான மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 7ஆம் தேதி நடைபெறுகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 10ஆம் தேதி நடக்கிறது. இந்த ஆண்டு வைகை வறண்டுள்ளதால் தற்காலிகமாக தண்ணீர் நிரப்பட்ட தொட்டியில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார் கள்ளழகர்.
மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதனையடுத்து திக் விஜயம் நடைபெறும். மே 7ஆம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் தேரோட்டம் நடைபெறும் இந்த விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர்.
சித்திரை திருவிழாவிற்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். கள்ளழகர் வைகையில் எழுந்தருள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
அழகரை வரவேற்க தயாராகும் மதுரை
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடுதலுடன் சித்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. தொடர்ந்து கள்ளழகர் பெருமாள் எழுந்தருளும் 400க்கும் மேற்பட்ட மண்டபங்கள் முன்பு பந்தல்கால் நடும் பணி தொடங்கியது.முன்னதாக நூபுர கங்கையில் நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெற்றியில் நாமமிட்டு தண்ணீர் பீய்ச்சுவதற்காகவும், தீப்பந்தம் எடுப்பதற்காகவும், சாமி ஆடுவதற்காகவும் விரதத்தை தொடங்கினர்.
அழகர் கோவில் சித்திரை திருவிழா
அழகர் கோவில் சித்திரைத் திருவிழா மே 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாக்களின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10ஆம் தேதி நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வைகை ஆற்றில் நிரந்தரமாக தண்ணீர் வந்ததால் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது.
வைகை அணை
மழை பெய்யாவிட்டாலும் திருவிழாவின் போது வைகை அணையில் இருந்து சித்திரைத் திருவிழாவுக்காக தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. வைகை அணையிலும் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் மதுரையின் குடிநீருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு தண்ணீர் திறக்க முடியவில்லை.
தொட்டியில் இறங்கும் அழகர்
மே 10ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் லட்சக்கணக்கான பக்தர் கூடுவார்கள்.
அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் தொட்டி கட்டி அதில் 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தண்ணீர் பீச்சியடிக்கவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். மலையில் இருந்து மக்களைக் காண வரும் அழகரை வரவேற்க தயாராகி வருகிறது மதுரை.
தங்கக் குதிரை வாகனம்
10ஆம் தேதி புதன்கிழமை காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து
11ஆம் தேதி சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுவார். தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிப்பார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் விடிய விடிய நடைபெறும்.
விடை கொடுக்கும் மக்கள்
13ஆம்தேதி அதிகாலையில் அங்கிருந்து பிரியா விடைபெற்று அழகர் திருமலை நோக்கி செல்கிறார். அன்றிரவு அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் காட்சி தருகிறார். 14ஆம் தேதி காலையில் கள்ளழகர் கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேருகிறார். 15ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.