மே 10-இல் சித்ரா பௌர்ணமி... திருவண்ணாமலைக்கு 2,100 சிறப்பு பேருந்துகள்
வரும் 10-ஆம் தேதி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக 2,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
திருவண்ணாமலை: வரும் 10-ஆம் தேதி சித்ரா பௌர்மணியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக 2,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பஞ்சபூத சிவஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலாகும். இங்கு ஒவ்வொரு மாதம் பௌர்ணமி நாளின்போது ஏராளமானோர் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்வர்.
சுமார் 14 கி.மீ. தூரம் கொண்ட மலையை சுற்ற முடியாத முதியவர்கள், உடல் நலிந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்காக ஆட்டோ, கார்கள் மூலமும் சுற்றும் வசதியும் உள்ளது. இந்நிலையில் வரும் 10-ஆம் தேதி சித்ரா பௌர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவர்.
எப்போது பௌர்ணமி?
சித்ரா பவுர்ணமி வருகிற 9-ஆம் தேதி அதிகாலை 1.46 மணிக்கு தொடங்கி 10-ஆம் தேதி அதிகாலை 3-27 மணிக்கு முடிகிறது. இதனால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டம்
அதில் போக்குவரத்து துறை, மின் துறை, காவல் துறை, சுகாதார துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆட்சியர் பேசுகையில், திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் கடுமையாக பின்பற்ற வேண்டும்.
நோ டூ பிளாஸ்டிக்ஸ்
மேலும் கிரிவலப் பாதையில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரை சுற்றி 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக 4 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மருத்துவ முகாம்கள்
கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக கிரிவலப்பாதையில் 10 மருத்துவ முகாம்கள், 4 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிரிவலப்பாதையில் 40 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் தவிர பிற இடங்கள் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
2,100 பேருந்துகள்
சித்ரா பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 2,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பஸ்நிலையங்களில் இருந்து கிரிவலம் புறப்படும் இடத்துக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பக்தர்கள் சித்ரா பவுர்ணமியன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரை கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
லட்சக்கணக்கானோர் குவிவர்
இதனால் வெளியூர்கள், வெளிமாநிலங்களிலிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது.