சித்திரை திருவிழா: வெயிலுக்கு இதமாக பக்தர்களின் தீர்த்தவாரியில் நனைந்த கள்ளழகர்
மதுரை: வராரு.... வராரு.... கள்ளழகர் வந்துட்டாரு என்று மகிழ்ச்சியில் உள்ளனர் மதுரை மக்கள். தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக வைகையில் இறங்கிய கள்ளழகர் மீது புனித நீரை பீய்ச்சியடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கள்ளழகர் மதுரைக்கு வருகிறார் என்றால் அவரைக்காண வரும் மக்கள் கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அதிலும் கள்ளழகர் வேடம் தரித்தவர்கள் முதுகில் தோல் பை சுமந்து கொண்டு அதில் தண்ணீரை நிரப்பி வைத்து, மக்கள் மீது பீச்சுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
[படங்கள்: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்]
அழகரை தரிசிக்கவரும் பக்தர்களிடையே இவர்களது கூட்டம் மிக அதிகமாக இருக்கும். சிலர் கைகளில் தடி, வளரி ஆகிய வற்றை தூக்கி கொண்டு உருமா தொப்பி அணிந்து செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
ஆற்றில் இறங்கிய அழகர்
லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று காலையில் இறங்கினார். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள், துருத்தி நீரை அழகர் மீதும், திரண்டு வந்த மக்கள் கூட்டத்தின் மீதும் தெளித்தனர்.
நேர்த்திக்கடன்
ஆரம்ப காலத்தில் விவசாயம் செழிக்க சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது, விவசாயிகள் கள்ளழகர் வேட மணிந்து கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடிப்பதை நேர்த்திக்கடனாக செய்வார்கள்.
விரதம் இருக்கும் பக்தர்கள்
காலப்போக்கில் விவசாயம் பொய்த்து வருவதால் தற்போது நகரவாசிகள், குடும்ப நலன், தொழில்வளம் பெருக நேர்த்திக் கடனாக விரதம் இருந்து, அழகர் வேடமணிந்து தண்ணீரை பீய்ச்சியடிப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக பெற்றோர், குழந்தைகளுக்கு அழகர் வேடமணிந்து, தண்ணீரை பீய்ச்சியடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
வைகையை நிறைத்த கூட்டம்
இன்று காலையில் ஆற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை வரவேற்கும் விதமாக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. அதனை மீறி நின்றது மக்கள் வெள்ளம் வைகை ஆற்றுக்குள் மட்டுமல்ல... அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள், ஏ.வி. மேம்பாலம் என எங்கு திரும்பினாலும் மனித தலைகளே காணப்பட்டன.
புறப்பட்ட அழகர்
காலையில் வைகையில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த கள்ளழகர், அங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டார். பின்னர் மக்கள் வெள்ளத்தில் சென்ற அவர், பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு செய்தனர்.
வெயிலுக்கு இதமாக தீர்த்தவாரி
அப்போது, அழகரின் மீது, கள்ளழகர் வேடம் பூண்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. வெயிலுக்கு இதமாக தண்ணீரை பக்தர்கள் மீது கள்ளழகர் வேடமிட்டவர்கள் பீய்ச்சியடித்தனர். பகல் முழுவதும் அங்கிருக்கும் அழகர், இரவில் வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்.