மதுரை சித்திரை திருவிழா - ஏப்.27ல் மீனாட்சி திருக்கல்யாணம் -30ல் கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்
மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 27ஆம் மீனாட்சி, சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் மதுரையில் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதியன்று சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமியும், அம்மனும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
சுவாமி, அம்மன் எழுந்தருள்வதற்காக தங்கச் சப்பரம், சிம்ம வாகனம், காமதேனு வாகனம், தங்க பல்லக்கு, குதிரை வாகனம், நந்திகேஸ்வரர், யானை வாகனம், யாழி வாகனம் ஆகியவை தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25ஆம் தேதி இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 26ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்விஜயமும் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 27ஆம்தேதி நடைபெறுகிறது. இத்திருக்கல்யாணம் முடிந்த உடன் மீனாட்சி, பிரியாவிடை சமேதராக காட்சியளிப்பதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண் குளிர கண்டு ரசிப்பார்கள்
28ஆம் தேதி, மீனாட்சி, பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரர் பிரம்மாண்ட தேரில் ஏறி நான்கு மாட வீதிகளிலும் வலம் வருவார். 29ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்
ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு அழகர்கோவில் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் தங்கபல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். மறுநாள் 29ஆம்தேதி அதிகாலை மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. 30ஆம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று அதிகாலை 5.45 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இவ்விழாவினில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவிருப்பதால், அதற்கான பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.