நெருங்கி வரும் சித்ரா பெளர்ணமி- திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமி கிரிவலத்தைமுன்னிட்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரலாம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலைநகரில் அண்ணாமலையார் திருக்கோவில் உலக புகழ்பெற்றது. மாதந்தோறும் பௌர்ணமியன்றுசுமார் 5 லட்சம் மக்கள் கிரிவலம் வருவார்கள். அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகைதீபம், சித்ராபௌர்ணமி, ஆருத்ராதரிசனம், திருவூடல் போன்றவை புகழ்பெற்றது.
அடுத்து வரும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சிறப்பு வாய்ந்த்து என பக்தர்கள் கூறுகின்றனர். இதனால் சித்ரா பௌர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.
அடுத்த மாதம் ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதி வரும் சித்ராபௌர்ணமிக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அப்படி வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதி, போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் ஆட்சியர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் 23 துறைஅதிகாரிகள் கலந்துக் கொண்டனர். அதில் ஒவ்வொரு துறையும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியதிட்ட அறிக்கையை தந்தனர். அதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் பக்தர்களுக்கு எந்ததொந்தரவும் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இரண்டாயிரம் சிறப்பு பேருந்துகள், நகரத்துக்குள் வரும் 9 சாலையிலும் தற்காலிகபேருந்து நிலையங்கள், அந்த நிலையங்களில் தற்காலிக கழிப்பிட வசதி, கிரிவலப்பாதையில் தடையின்றி குடிநீர் கிடைக்க வழிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.