3வது நாளாக தொடரும் போராட்டம்... தமிழகத்துக்கு வரும் ஆந்திரா பஸ்கள் நிறுத்தம்!
சென்னை: 20 தமிழர்களை மனிதாபிமானம் இன்றி சுட்டுப் படுகொலை செய்த ஆந்திராவைக் கண்டித்து தமிழகத்தில் 3வது நாளாக போராட்டங்கள் நீடித்து வருவதால், இருமாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாகக் கூறி, நேற்று முன்தினம் 20 தமிழர்களை ஆந்திரா போலீஸ் சுட்டுப் படுகொலை செய்தது. ஆனால் 20 பேரையும் கைது செய்து சித்ரவதைகளுக்குப் பின்னரே சுட்டுப் படுகொலை செய்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஆந்திரா போலீசாரின் இந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆந்திரா பவனை முற்றுகையிட்டனர். நெய்வேலியில் திருப்பதி தேவஸ்தான அலுவலகம், கடலூரில் ஆந்திரா வங்கி ஆகியவற்றை முற்றுகையிட்டு இழுத்து மூடினர்.
மேலும் சென்னை கோயம்பேடு, பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் தமிழர் முன்னேற்றப் படை, தமிழக முன்னேற்றக் கழகத்தினர் ஆந்திரா பேருந்துகளை அடித்து நொறுக்கினர். கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்றும் இந்த போராட்டங்கள் மற்றும் மறியல்கள் தொடர்ந்தன. வேலூர் மாவட்டம் வாலஜாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் ஆந்திர மாநிலத்துக்கு சொந்தமான பஸ்கள் மீது தமிழக எதிர்ப்பார்கள் பலர் கற்களை வீசி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் அரசு பஸ்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.
அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருத்தணி ஆகிய ஊர்களுக்கு வரும் ஆந்திரா பஸ்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக ஸ்ரீகாளஹஸ்தி பணிமனை மேலாளர் பயாஜ் அகமது தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், இருமாநிலங்களுக்கிடையே போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.