'சோ' ராமசாமி பெயர் எப்படி வந்தது?
சோ என்றழைக்கப்படும் ராமசாமிக்கு சோ என்ற பெயர் எப்படி வந்தது?
சென்னை: துக்ளக் ஆசிரியர் ராமசாமிக்கு சோ என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான சுவாரசியமான தகவல்.
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி, உடல் நலமின்றி நவம்பர் 29ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் மறைந்தார்.
வெறும் ராமசாமி என்றால் யாருக்கும் அவரைத் தெரியாது. சோ என்றாலோ சோ ராமசாமி என்றாலோதான் அனைவருக்கும் தெரியும். அப்படி தன் பெயரோடு ஒட்டிக் கொண்ட சோ என்ற பெயர் எப்படி அவரோடு தொடர்ந்தது என்பது சுவாரஸ்யமான விஷயம்.
நாடக பிரியர் சோ
1950களில் நாடகங்களை எழுதி நடிக்க தொடங்கிய சோ, சுமார் 20 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளளார் `சோ` ராமசாமி. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கும் சோவிற்கு நாடாகத்தில் ஈடுபாடு மிக மிக அதிகம்.
நாடகத்தில் நாட்டம் வந்தது எப்படி?
சோ தனது 20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. அந்த ஆர்வத்தின் காரணமாக முதன்முதலாக ‘கல்யாணி' என்ற நாடகத்தில் ராமசாமி நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்து பெயர் பெற்றார். இவருடைய நாடகத்தில் மிக முக்கியமானது முகமது பின் துக்ளக் நாடகம்தான். அது பின்னர் திரைப்பட மாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து துக்ளக் என்ற அந்தப் பெயரைதான் தனது பத்திரிகைக்கும் பெயராக வைத்துக் கொண்டார்.
தேன்மொழியாள் நாடகம் தந்த `சோ`
பகீரதன் என்பவர் எழுதிய `தேன்மொழியாள்` என்ற மேடை நாடகத்தில்தான் சோவிற்கு `சோ` என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த நாடகத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயரையே தன் புனைப்பெயராக பின்னர் மாற்றிக் கொண்டார். அந்தப் பெயர் அவருடைய இயற்பெயரையே மறக்கச் செய்துவிட்டது. இப்போது யாருக்கும் ராமசாமி என்றால் தெரியாது. `சோ` என்றால் உடனே அனைவருக்கும் தெரிந்துவிடும்.
விருதுகள்
சட்டம் படித்து, நாடகம், சினிமா என்று தான் இயங்கும் தளத்தை வேறு திசைக்கு மாற்றிக் கொண்ட சோ, பத்திரிகையாளராகவும், அதில் எழுதிய கட்டுரைகளின் மூலம் அரசியல் விமர்சகராகவும் அறியப்பட்டார். பத்திரிக்கைத் துறையில் அவர் ஆற்றிய பணிக்களுக்காக 1986ம் ஆண்டு வீரகேசரி விருது வழங்கப்பட்டது. 1994ல் கொயங்கா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.