வீரப்பனை காட்டுமிராண்டி என சித்தரிக்கும் சாக்லேட் விளம்பரம்! தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பு
சென்னை: போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனை 'காட்டுமிராண்டி' என சித்தரித்து தொலைக்காட்சி சேனல்களில் ஒரு சாக்லேட் விளம்பரம் அடிக்கடி ஒளிபரப்பாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, சந்தன கடத்தல் வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம்தேதி, தமிழக அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். வீரப்பனின் சடலம், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் அங்கு நினைவு தினம் அனுசரிக்கிறார்கள். வீரப்பனின் 12வது நினைவு நாளான நேற்று, முத்துலட்சுமி தனது குடும்பத்தாருடன் வந்து சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
இப்படி ஒருபக்கம் நடைபெறும் நிலையில், ஒரு சாக்லேட் நிறுவனத்தின் விளம்பரத்தில் வீரப்பன் காட்டுமிராண்டி என வர்ணிக்கப்பட்டார். அதுவும் நினைவு தினமான நேற்று இந்த விளம்பரம் பல்வேறு சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பானது.
அச்சு அசல் வீரப்பன் தோற்றத்தில் உள்ள ஒரு நபர் குறிப்பிட்ட அந்த சாக்லேட்டை சாப்பிட்டதும், தற்கால இளைஞர் தோற்றத்துக்கு மாறுகிறார். "பசி வந்தால் நீ காட்டுமிராண்டியா மாறிடுவே" என சக நண்பர், உருமாற்றம் அடைந்த நண்பரை பார்த்து சொல்வதை போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. அதாவது வீரப்பன் என்பவர் காட்டுமிராண்டி என அந்த விளம்பரம் சொல்கிறது.
போலீசாரால் குற்றம்சாட்டப்பட்ட எல்லோருமே குற்றவாளிகள் இல்லை.. நீதிமன்றத்தில் தக்க ஆதாரங்களோடு நிரூபித்து, அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கும்வரை அவர் நிரபராதியாகவே கருதப்பட வேண்டும். குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரையும்கூட, சட்டத்திற்கு உட்பட்டுதான் தண்டிக்க வேண்டுமே தவிர, சமூக புறக்கணிப்பு செய்வது இயலாது.
ஆனால், குறிப்பிட்ட இந்த சாக்லேட் விளம்பரமோ, தமிழகத்தில் பிறந்த ஒரு நபரை தமிழ் சேனல்கள் வாயிலாகவே காட்டுமிராண்டி என கூறி விளிப்பது மனித உரிமை ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரம் ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி சேனல்களிலும் ஒளிபரப்பப்படுகிறது.
வீரப்பன் தொடர்பான சினிமாக்களை யாராவது உருவாக்க முன்வந்தாலே முத்துலட்சுமி உள்ளிட்ட அவருக்கு நெருக்கமானவர்களால், கோர்ட்டில் வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் வெளியான 'கில்லிங் வீரப்பன்' படம் கூட அதற்கு ஒரு உதாரணம். இந்நிலையில்தான், நேரடியாக வீரப்பனை காட்டுமிராண்டி என உருவகப்படுத்தி அழைக்கும் இந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.