பைபிளை விமர்சனம் செய்த சீமானுக்கு கிறிஸ்தவர்கள் கண்டனம்
ராமேஸ்வரம்: கிறிஸ்தவர்களை இழிவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக ராமேஸ்வரம் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த 2013ம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மதம் குறித்தும், அவர்களது புனித நூலான புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு குறித்தும் சீமான் விமர்சனம் செய்து பேசியதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ராமேஸ்வரம் பகுதி கிறிஸ்தவ அமைப்பினர் கோபத்தில் சீமானுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
"கிறிஸ்தவ மக்களின் புனித நூலான பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடுகளை கேவலப்படுத்தியும், கிறிஸ்தவத்தின் அடிப்படை புனித ஆத்மார்த்த தத்துவமான 'திவ்ய நற்கருணை' உட்கொள்வதை இழிவுபடுத்தி பேசிவரும் தமிழ் உணர்வுகளை பணத்திற்காக அடகு வைக்கும் போலித்தமிழன் சீமானை காவல்துறையே.. தமிழக அரசே... கைது செய்" போன்ற வாசகங்களுடன் ராமேஸ்வரம் தீவு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு போஸ்டர்களை ஒட்டி உள்ளன.
சீமான் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அப்படி பெறவில்லை என்றால், நாங்கள் அடுத்தக்கட்டமாக சீமான் உருவப்பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோம் என்று கிறிஸ்தவ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.