நெல்லை அருகே கிறிஸ்துமஸ் குடில்களுக்கு தீ: சாலை மறியலால் பதற்றம்
நெல்லை: நெல்லை அருகே கிறிஸ்துமஸ் குடில்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் கிறிஸ்துவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி நான்கு வழிச்சாலையில் புன்னியவாளன்புரம் என்ற இடத்தில் புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணி தேவலாயம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பல லட்சம் பொருட்செலவில் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 7 மணி அளவில் பல சமய மக்களும் இதனை பார்த்து வணங்கி தங்களுடைய கேமராவில் போட்டோக்கள் எடுத்துகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பெட்ரோல் கேன்களில் கொண்டு வந்த பெட்ரோலை குடில்கள் மேல் ஊற்றி தீ வைத்தனர். இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் போடவே மர்ம நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அப்போது விரைந்து வந்த பொதுமக்கள் தீயை அணைத்ததால் கிறிஸ்துமஸ் குடில்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவி்ல்லை.
அங்கிருந்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் பணகுடி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அருளாளர் கேபி சபைக்கு வந்துள்ளனர். அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த கிறிஸ்துமஸ் குடில்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி விட்டனர். தீ பற்றி எரிவதை கண்ட ரோட்டில் பயணம் செய்த பயணிகள் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அருகில் இருந்தவர்கள் வந்து தீயை அணைத்ததால் தீ அணைந்தது. ஆனால் குடில்கள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. இதுபோல் பணகுடி அண்ணாநகரில் வைக்கப்பட்டிருந்த குடில்களுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். அடுத்தடுத்து மூன்று குடில்கள் எரிக்கப்பட்டதால் பணகுடி புனித வாளாளர் ஆலயம் முன்புள்ள சாலையில்கிறிஸ்தவர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி பாலாஜி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரிடம் குடில்களை எரித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.