ஓகி புயலால் மீனவர்கள் மாயம் : தொடரும் சோகம்....கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடாத மீனவ கிராமங்கள்
ஓகி புயல் பாதிப்பால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை குமரி மீனவ கிராம மக்கள் தவிர்த்து உள்ளனர்.
கன்னியாகுமரி : ஓகி புயலில் மீனவர்கள் மாயமானதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல மீனவ கிராமங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படாததால் நேற்று பெரும் சோகமும் அமைதியும் நிலவியது.
ஓகி புயல் கடந்த 30-ந்தேதி குமரி மாவட்டத்தை தாக்கியதில் மாவட்டம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியது.
இதில் விசைப்படகுகள் மூலம் ஆழ் கடலுக்கு பல நாட்களுக்கு முன்பே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு ஓகி புயல் பற்றிய எச்சரிக்கை சரியாக சென்றடையவில்லை.
கடலில் மீனவர்கள் அவதி
ஓகி புயலால் கடலில் ஏற்பட்ட சூறைக்காற்று, கொந்தளிப்பு போன்றவற்றை பார்த்து கரை திரும்பியபோதும் பலரது படகுகள் புயலில் சிக்கி சின்னா பின்னாமானது. பல மீனவர்கள் கடலில் மூழ்கி உயிர் இழந்தனர். ஏராளமான மீனவர்கள் படகுடன் கடலில் அலைக்கழிக்கப்பட்டதால் அவர்கள் கதி என்ன ஆனது? என்று தெரியாமலேயே உள்ளது. இதுவரை பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை.
மீனவர்களின் கிறிஸ்துமஸ் விழா
கடலோர மீனவ கிராமங்களில் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிப்பதால், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். வண்ண வண்ண மின்விளக்குகளால் மீனவர்களின் வீடுகள் ஜொலிக்கும். பெரிய கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் தொங்க விடப்பட்டு பண்டிகை களை கட்டும்.
களையிழந்த கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் நாளில் நள்ளிரவில் ஆலயங்களில் திரளும் மக்கள் பிரார்த்தனை செய்து ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி மகிழ்வார்கள். ஆனால் இந்த ஆண்டு குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வழக்கமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை காண முடியவில்லை. ஆடம்பரங்கள் இன்றி மிகவும் எளிமையாகவே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்தது. பல இடங்களில் மக்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாததால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படவில்லை.
கரை திரும்புவார்கள் என்று நம்பிக்கை
ஓகி புயலில் மீனவர்களை இழந்த குடும்பத்தினர் இன்னும் அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் கண்ணீருடனேயே காட்சி அளிக்கிறார்கள். அதேபோல் கடலில் மாயமாகி இதுவரை அவர்களது கதி என்ன வென்று தெரியாத மீனவர்கள் குடும்பத்தினர் அவர்கள் எங்காவது பத்திரமாக கரை ஒதுங்கி இருப்பார்கள். எப்படியும் சொந்த ஊருக்கு திரும்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை எதிர்பார்த்து கண்ணீருடன் உள்ளனர்.