கிறிஸ்துமஸ் விடுமுறை... அடித்து பிடித்து ஊருக்கு செல்லும் மக்கள்... திணறும் பஸ், ரயில் நிலையங்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினர் சொந்த ஊர் செல்வதற்காக பஸ், ரயில் நிலையங்களில் காணப்படுகின்றனர்.
பொதுவாக சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் விடுமுறை என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து கல்வி நிமித்தமாகவும், பணி நிமித்தாகவும் சென்னையில் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் ஊருக்கு செல்வர்.
இதனால் கோயம்பேடு, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்திருக்கும். இந்நிலையில் வரும் திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுவிட்டது.
இதையடுத்து நேற்று மாலையிலிருந்தே ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறை எதிரொலி:
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 23, 2017
சென்னையின் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
போதிய பேருந்து வசதிகள் இல்லையென பொதுமக்கள் குற்றசாட்டு#Christmas pic.twitter.com/955gKT66jN
சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இத்தனை கூட்டங்களுக்கு ஏற்ப கோயம்பேடு பஸ் நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன இன்னும் அடுத்தவாரம் ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. அதற்கும் இதுபோல் தொடர் விடுமுறை விடப்படும். அப்போதும் இதே நிலைதான் என்று பயணிகள் தற்போதே கவலை கொள்ளத் தொடங்கிவிட்டனர்.