கிறிஸ்துமஸ் பண்டிகை: தமிழகம் முழுவதும் நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை !
சென்னை: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை சென்னையில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற சென்னை சாந்தோம் பேராலயத்தில் நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதேபோல் பெசன்ட் நகர் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றவர்கள், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். திருச்சி சகாய மாதா பேராலயத்தில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதுரை புனித மரியன்னை தேவாலயம், பாஸ்டின் நகர் தூயபவுல் ஆலையம் உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவில் நடந்த திருப்பலி பிரார்த்தனையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நெல்லை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் மெழுகுவர்த்திகள் ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.